தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐந்து வகை இறால்களுக்கு மலேசியா தற்காலிக தடை விதித்துள்ள நிலையில், இதுதொடர்பாக மலேசிய அரசாங்கத்துடன் உடனடி பேச்சுவார்த்தை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விராகுல் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தாய்லாந்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் ராட்சதா தனாதிரெக் வெளியிட்டுள்ள தகவலில், நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி தடை நீண்டகாலம் தொடருமானால், இறால் வளர்ப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் கடலுணவு விநியோகச் சங்கிலியில் ஈடுபட்டுள்ள பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடும் என பிரதமர் எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, அந்நாட்டு துணைப் பிரதமரும், வர்த்தக அமைச்சரும், வேளாண்மை மற்றும் கூட்டுறவு அமைச்சரும் இணைந்து மலேசிய அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தி தாய்லாந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் காக்கும் வகையில் தீர்வைக் காண நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.








