பினாங்கு மாநிலம், புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், அங்கு செயல்பட்டு வந்த மூன்று அனைத்துலக மோசடி கும்பல்கள் முறியடிக்கப்பட்டதுடன், 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கால் செண்டர்கள் என்ற பெயரில் செயல்பட்டு வந்த வளாகங்களில், நேற்று மேற்கொள்ளப்பட்ட மூன்று தனித்தனி சோதனை நடவடிக்கைகளின் போது, கைது செய்யப்பட்ட அக்கும்பல், உலக அளவில் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படுகிறது.
அதேவேளையில், கைது செய்யப்பட்டவர்களில் நான்கு உள்ளூர் ஆண்களும் அடங்கியுள்ளதாக பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ அசிஸி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சோதனையின் போது, 28 கணினிகள், 21 கைப்பேசிகள் மற்றும் ஒரு வைஃபை ரவுட்டர் கருவி உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 25,000 ரிங்கிட் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மோசடி கும்பல் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வந்தது முதற் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் அசிஸி இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, அக்கும்பலின் நடவடிக்கைகள், நிதி பரிவர்த்தனைகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.








