சபா மாநிலம் கோத்தா கினபாலு, மங்கதால் பகுதியில் உள்ள சுங்கை ரம்பயான் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்ற 11 வயது சிறுவன் நீர்ச் சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.05 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில், முகமது ஹமிசான் அகில் அகமது என்ற அச்சிறுவன் தனது ஒன்பது நண்பர்களுடன் ஆற்றில் மீன் பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகின்றது.
அப்போது, சிறுவனும் அவனது நண்பரொருவரும் குழுவிலிருந்து விலகிச் சென்றபோது, திடீரென ஆற்றின் பலமான நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், சிறுவனை மயக்க நிலையில் மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
என்றாலும், சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் உயிரிழந்ததாக கோத்தா கினபாலு மாவட்ட போலீஸ் தலைவர் காசிம் மூடா தெரிவித்துள்ளார்.








