கிளந்தான், பாச்சோக் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் 14 வயது மாணவி ஒருவர் திடீரென ஹிஸ்டீரியா பாதிப்புக்குள்ளாகி, வகுப்பறை ஜன்னல் வழியாக வெளியேறி முதல் மாடியின் குறுகிய நடைபாதையில் ஏறி நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆசிரியர்கள் அவரை மீட்க முயன்றும், அவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால் தீயணைப்புத் துறையினரின் உதவி கோரப்பட்டது. சுமார் அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் மாணவியைப் பத்திரமாக மீட்டனர்.
இது குறித்துப் பேசிய மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இஸ்மாயில் ஜமாலுடின், அந்த மாணவி ஏற்கனவே ஹிஸ்டீரியா மற்றும் மனநலச் சிகிச்சை பெற்று வருவதாகவும், தற்போது அவர் காயமின்றி தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சமூக வலைதளங்களில் பரவுவது போல இது தற்கொலை முயற்சி அல்ல என்றும், பொதுமக்கள் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.








