கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் முனையம் 1-இல் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் 27 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன நாட்டவரான அவர், நேற்று பிற்பகல் 1.19 மணியளவில் புறப்பாட்டு மண்டபத்தில் ஓடியும், பாடியும், நடனமாடியும் பயணிகளைத் தொந்தரவு செய்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கட்டுப்படுத்தினர்.
அப்பெண் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவர் பரிந்துரைக்கப்பட்ட மருந்தை உட்கொள்ள மறந்துவிட்டதாக அவரது கணவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் காஜாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், சம்பவம் குறித்து தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கேஎல்ஐஏ போலீசார் தெரிவித்துள்ளனர்.








