நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு பெருமளவில் குடியுரிமை வழங்கப்பட்டதாகவும், 12 லட்சம் சீனப் பிரஜைகள் மலேசியாவில் தங்கியிருப்பதாகவும் பரவி வரும் தகவல்களை உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் மறுத்துள்ளார்.
ஏற்கெனவே மறுக்கப்பட்ட காணொளிகள், சுவரொட்டிகள் மற்றும் தகவல்களை சிலர் திட்டமிட்டு மீண்டும் பரப்பி, மக்களிடையே குழப்பத்தையும் இனவெறி மற்றும் வெறுப்பையும் தூண்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய அவதூறான தகவல்கள் தனிநபர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் நற்பெயரை பாதிப்பதுடன், பொது நம்பிக்கை, அமைதி மற்றும் தேசியப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்வதற்கு முன் அதிகாரப்பூர்வ ஆதாரங்களை சரிபார்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்திய அவர், உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.








