சிலாங்கூர் மாநிலம் பந்திங்கில் 15 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான எறும்புத்தின்னி, மான் உள்ளிட்ட வனவிலங்குகளின் பாகங்கள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள பெண் உணவக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தென்மண்டல ஒருங்கிணைந்த வனவிலங்கு பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ், தேசிய வன விலங்குகள் மற்றும் பூங்காக்கள் துறையான பெர்ஹிலித்தான் அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனையை மேற்கொண்டனர்.
இச்சோதனையில் எறும்புத்தின்னி, மான், தவளை, புனுகுப்பூனை மற்றும் மென்மையான ஓடு கொண்ட ஆமைகளின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் பொட்டலங்களுடன், உறைவிப்பான் மற்றும் கைப்பேசியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் விசாரணைக்காக மாவட்ட பெர்ஹிலித்தான் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
வனவிலங்கு குற்றங்களைத் தடுக்க அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என பெர்ஹிலித்தான் தெரிவித்துள்ளது.








