கோலாலம்பூர் ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சந்திப்பில் இன்று புதன்கிழமை அதிகாலை 1 மணியளவில் குடிநுழைவுத் துறை லோரி ஒன்றும், காரும் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
சிவப்பு விளக்கை மீறிச் சென்றதாகக் கூறப்படும் அந்த லோரி, காரை மோதிய பின்னர் சாலையோரம் நின்றிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை மோதியது.
இதில் 53 வயது தந்தை, 25 மற்றும் 12 வயதுடைய அவரது இரு மகள்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
55 வயதான தாயார் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், இவ்விபத்து தொடர்பாக லோரி ஓட்டுநரும், கார் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்துமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இவ்விபத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.








