கோலாலம்பூர், மே.24-
சமூக ஊடகங்களில் மதம், இனம், அரச குடும்பம் தொடர்பான 3R விவகாரங்கள் உள்ளிட்ட ஆபத்தான உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த சட்டம் 588 ஆன 1998-ஆம் ஆண்டின் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையச் சட்டம் போதுமானது என்று தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சீல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொறுப்பற்ற நபர்கள் போலி கணக்குகளை உருவாக்கி, உணர்வுப்பூர்வமான உள்ளடக்கங்களைப் பரப்பி விட்டு, பின்னர் அக்கணக்குகளை மூடிவிடும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதே தற்போதைய முக்கியச் சவாலாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
மலாய் ஆட்சியாளர்கள், அரச குடும்பத்தினர் ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தி போலியாகச் செயல்படும் கணக்குகளைத் தடுப்பதில் சமூக ஊடக நிறுவனங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், இணையப் பாதுகாப்பு, 3R தொடர்பான சம்பவங்களைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டிக் டாக், மேத்தா போன்ற நிறுவனங்களுடன் மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.








