தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சியான திவேட் என்பது இனி இரண்டாவது தேர்வு அல்ல, மாறாக உயர்திறன் கொண்ட தொழிலாளர்களை உருவாக்கும் நாட்டின் முதன்மைப் பாதையாக உருவெடுத்துள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இன்று பாங்கி அவென்யூ மாநாட்டு மையத்தில் மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் 'அட்லெக்' மனிதவளத் துறைக்கான 29-வது மத்திய மண்டல பட்டமளிப்பு விழாவை நிறைவு செய்து உரையாற்றிய போதே அவர் இதனை வலியுறுத்தினார்.
இம்முறை, பட்டமளிப்பு விழா மண்டல வாரியாக நடத்தப்படுகிறது. இரண்டு பிரிவுகளாக சுமார் ஆயிரம் பேர் பட்டம் பெற்றனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் அதிகப்படியான பெற்றோர்களும் குடும்பத்தினரும் கலந்து கொண்டு பட்டதாரிகளை வாழ்த்த வேண்டும் என்ற அமைச்சின் நல்நோக்கத்தையே இது காட்டுகிறது. இந்த திறன் பயிற்சியின் வாயிலாக தொழில்நுட்ப தொழில் துறையில் இணைக்கின்ற பட்டதாரிகளுக்கு ஆரம்ப சம்பளமே 4 ஆயிரம் ரிங்கிட் என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.








