புத்ராஜெயா, மார்ச்.06-
மறைந்த அரசு தரப்பு துணை வழக்கறிஞர் அந்தோணி கெவின் மொரைஸ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ மருத்துவமனையின் மருத்துவரான கர்னல் டாக்டர் ஆர். குணசேகரன், தனது தண்டனையை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வரும் ஜூலை 31-ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் கட்டாய மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி குணசேகரன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி கெவின் மொரைஸ் கடத்தப்பட்டு, சிமெண்ட் நிரப்பப்பட்ட பீப்பாய்க்குள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இந்த கொடூரக் கொலைக்காக குணசேகரன் உட்பட 6 பேருக்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
கடந்த காலங்களில் இவர்களது மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போதைய சட்ட மாற்றங்கள் இவர்களுக்கு மறுஆய்வுக்கான வாய்ப்பை வழங்கியுள்ளன. அதன் அடிப்படையில் தனக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும்படி டாக்டர் குணசேரன் மனு தாக்கல் செய்துள்ளார்.








