ஷா ஆலாம், மே.03-
மலாக்கா மாநிலம் கடந்த ஆண்டு சுமார் 15 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து பில்லியன் கணக்கிலான வருவாயை ஈட்டியுள்ள நிலையில், வெளிநாட்டுப் பயணிகளைக் கவர தெருவோர டிஸ்கோக்கள் போன்ற கலாச்சாரத்திற்குப் புறம்பான கேளிக்கைகள் தேவையில்லை என்பதை மெய்ப்பித்துள்ளதாக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலே தெரிவித்துள்ளார். நீர் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளில் பாரம்பரிய உடைகள், பாடல்கள், கலை நிகழ்ச்சிகளைப் புகுத்தி மலேசியாவின் தனித்துவமான அடையாளத்தை உலகிற்கு அறிமுகப்படுத்துவதே உண்மையான சுற்றுலா மேம்பாடு என்று அவர் வலியுறுத்தினார்.
மலேசிய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் சுற்றுலாத் திட்டங்களை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், மலாக்கா மாநிலத்தின் இந்த வெற்றிகரமான அணுகுமுறையை நேரில் வந்து பார்க்குமாறு செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.








