போலீஸ் காரின் மீது செங்கல்லை வீசி சேதப்படுத்திய வீடற்ற வெளிநாட்டு நபர் ஒருவரின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 40 வயது மதிக்கத்தக்க அந்த நபர், கடந்த புதன்கிழமை நள்ளிரவில் போலீஸ் வாகனத்தின் மீது செங்கல்லை வீசியுள்ளார். கோலாலம்பூர் - ஜாலான் ஹாங் லெகியு நடந்த இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக அந்த நபரைப் கையும்களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
முதற்கட்ட நடவடிக்கைக்காக மூன்று நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த அந்த நபருக்கு, தற்போது மேலும் 14 நாட்களுக்கு தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் மற்றும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.








