ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றி பெற்றால், யார் மந்திரி பெசார் என்பது உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அதன் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலின் போது, புத்ரி வாங்சா சட்டமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ மஸ்லி மாலிக் மற்றும் புக்கிட் பத்து சட்டமன்றத் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஆர்தர் சியாங் சென் செர்ன்னை ஆகியோரை வழிநடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய முக்கியக் கவனம் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களைச் சிறப்பான முறையில் முன்னெடுப்பது மட்டுமே என்று டத்தோஸ்ரீ சைபுடின் குறிப்பிட்டார்.
ஜோகூர் மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பானின் அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் தேர்தல் ஆணையத்தால் வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது ஒரு நல்ல தொடக்கம் என்று மகிழ்ச்சி தெரிவித்த அவர், இனி வரும் நாட்களில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் மக்கள் நலத் திட்டங்களை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கும் தேர்தல் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்படும் என்றும் குறிப்பிட்டார்.
மத்திய அரசும் மாநில அரசும் ஒரே இணக்கமான கூட்டணியின் கீழ் இயங்குவது, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளாதார மண்டலம் போன்ற ஜோகூர் மக்களின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும், மாபெரும் திட்டங்களின் வெற்றிக்கும் இன்றியமையாதது என்று உள்துறை அமைச்சரான டத்தோஸ்ரீ சைபுடின் தெரிவித்துள்ளார்.









