கோலாலம்பூர், ஜூலை,26-
இம்மாதம் ஜூலை 17-ஆம் தேதி, பெட்டாலிங் ஜெயாவில், ஆடவர் ஒருவரை 7 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகைக்காக கடத்திய வழக்கில், ஆறு பேர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
இது குறித்து புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார் கூறுகையில், இந்த வழக்கில் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்கள் மீதான விசாரணையை போலீசார் முழுமையாக நிறைவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விசாரணை ஆவணங்கள் கடந்த ஜூலை 24 -ஆம் தேதி, சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் விவரித்துள்ளார்.
இந்நிலையில், அவற்றை ஆய்வு செய்த சட்டத்துறைத் தலைவர், 1961ஆம் ஆண்டின் கடத்தல் சட்டம், பிரிவு 3(1)-ன் கீழ் ஆறு பேருக்கு குற்றச்சாட்டு சுமத்த உத்தரவிட்டுள்ளதாகவும் டத்தோ எம். குமார் தெரிவித்துள்ளார்.








