கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA- வில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், சுமார் 4.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரைக் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார், கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி ஐரோப்பாவிற்குப் பயணம் செய்யவிருந்த மூன்று உள்ளூர் ஆடவர்களின் பைகளைச் சோதனையிட்டபோது, 3.6 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 45 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
பிடிபட்டவர்களில் தகவல் தொழில்நுட்பத் தொழில்நுட்பவியலாளர் ஒருவரும், இரு பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர். மற்றொரு சம்பவத்தில், ஏப்ரல் 5-ஆம் தேதி KLIA-விற்கு அருகிலுள்ள வணிக வளாகத்தில் 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரின் பையிலிருந்து 6 லட்சத்து 25 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான 12.5 கிலோ ஷாபு போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரும் சுமார் 5,000 ரிங்கிட் பணத்திற்காக போதைப்பொருள் கடத்தல்காரர்களாக செயல்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழூ தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்று டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்தார்.








