நவ. 20-
இந்த வார இறுதியில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் MADANI அரசாங்கத்தின் இரண்டு வருட நிறைவும் பொது சேவைகள் சீர்திருத்த தேசிய மாநாடு நிகழ்ச்சியில், போலீஸ் சம்மன்களுக்கு 60 விழுக்காடு வரை கழிவு வழங்கப்பட உள்ளது.
கடந்த ஆண்டு 50 விழுக்காடு கழிவு வழங்கப்பட்டதை விட இந்த ஆண்டு வழங்கப்படும் கழிவு அதிகரித்துள்ளது என்று உள்துறை அமைச்சின் தகவல் தொடர்பு பிரிவின் செயலாளர் Fairul Nizam Che Rus தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சம்மன்கள் செலுத்துவதற்காக 25 முகப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சோடு பிற அமைப்புகளின் சேவைகளும் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, நாட்டின் பாதுகாப்பு, அமைதி, வெளிநாட்டவர்களை நிர்வகித்தல், குடியுரிமை, எல்லை மேலாண்மை ஆகியவற்றில் அமைச்சு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்படும் என்றார்.








