கோலாலம்பூர், ஆகஸ்ட் 26-
கோலாலம்பூர் மஸ்ஜிட் இந்தியாவில் நடைப்பாதை பாதாளத்தில் விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஓர் இந்தியப் பிரஜையான விஜயலெட்சுமியை தேடும் பணி, Pantai Dalam-மில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் இன்று திங்கட்கிழமை இரண்டாவது நாளாக மேற்கொள்ளளப்பட்டு வருகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை 50 க்கும் மேற்பட்ட மீட்புப்பணியாளர்கள், Pantai Dalam-மில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடல் நடவடிக்கையில் எந்தவொரு பலனும் அளிக்கவில்லை.
இன்று இரண்டாவது நாளாக அந்த மையத்தை குறி வைத்து, தேடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர் மாநகரில் கழிவு நீரை, பாதாள சாக்கடை காய்வாய்கள் வாயிலாக கடைசியாக கொண்டு சேர்க்கப்படும் இடமாக Pantai Dalam-மில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் விளங்குகிறது.
விஜயலெட்சுமியை தேடும் இந்த சோதனை நடவடிக்கையில் தீயணைப்பு, மீட்புப்படையினர், பொது தற்காப்பு படையினர் மற்றும் Indah Water Konsortium பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து 69 மீட்டர் தூரத்தில் பொருத்தப்பட்டுள்ள சல்லடைக்கம்பிகளில் தேங்கி நிற்கும் திடப்பொருட்களை நொறுக்கி, திரவமாக மாற்றும் Jetter இயந்திரத்தை இலக்காக கொண்டு, சோதனை செய்யப்பட்டு வருவதாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.








