கங்கார்-இல் கடந்த ஜூலை 26-ஆம் தேதி சாக்குமூட்டையில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில், மேலும் ஒரு சாக்குமூட்டையில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.
இது குறித்து கங்கார் மாவட்ட போலீஸ் தலைவர் யூஷரிஃயூட்டின் முகமட் யூசோப் கூறுகையில், முதல் இடத்திலிருந்து சுமார் 31.1 மீட்டர் தொலைவில், புதர்களை அகற்றிக் கொண்டிருந்த 61 வயதான ஆண் ஒருவர், இரண்டாவது சாக்குமூட்டையை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த சாக்குமூட்டை மண்ணில் பாதியாக புதைக்கப்பட்டிருந்ததுடன், அதன் அருகே உள்ளாடை, பழைய கிழிந்த கால்சட்டை மற்றும் பெல்ட்டும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட எலும்புகள் மற்றும் பொருட்கள் சுல்தானா பாஹியா மருத்துவமனையில் தடயவியல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, முதல் மற்றும் இரண்டாவது எலும்புக்கூடு கண்டெடுப்பு வழக்குகளும் குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் கொலை வழக்காக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளன.








