செத்தாப்பாக்கில் உள்ள குடியிருப்பில் 14 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தில், பகடிவதை தொடர்பான அம்சங்கள் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக, மாணவியின் தாயார் கடந்த புதன்கிழமை இரவு 7.49 மணியளவில் பகடிவதை தொடர்பான புகார் அளித்ததாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் தெரிவித்தார்.
இதையடுத்து, வாங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை 92 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருப்பதால், சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் ஊகங்கள் அல்லது உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது.








