மலேசியா மற்றும் புருணை நாடுகளுக்கு இடையே மக்கள் நடமாட்டத்தை எளிதாக்கும் வகையில், குடிநுழைவு நடைமுறைகளை ஒருங்கிணைத்து ஒரே சோதனைச் சாவடி முறையை அமல்படுத்துவது குறித்து கொள்கை அளவில் இரு நாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.
தற்போதைய குடிநுழைவு நடைமுறைகள் நீண்ட நேரம் எடுப்பதால், பயணிகள் இரு நாடுகளிலும் பல சோதனைச் சாவடிகளை கடக்க வேண்டியுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்புக்குப் பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், ஒரே சோதனைச் சாவடி முறையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இரு நாடுகளின் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, இரு நாடுகளின் நில எல்லையை முழுமையாக அளவீடு செய்து வரையறுக்கும் பணியை 2034ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க தகவல் பகிர்வை வலுப்படுத்தவும், சரவாக்கில் வர்த்தக நெல் சாகுபடி மற்றும் புருணை–சரவாக் மின்சார இணைப்புத் திட்டத்தில் ஒத்துழைப்பைத் தொடரவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.








