மலாய்க்காரர் அல்லாத ஒருவர், மலேசியாவின் பிரதமராக வர முடியும் என்று கூறியுள்ள டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கை விசாரணை செய்யும் போலீசாரின் நடவடிக்கை குறித்து பசிர் குடாங் எம்.பி., ஹாஸ்ஸான் அப்துல் கரிம் வருத்தம் தெரிவித்துள்ளார்.
லிம் கிட் சியாங் அவ்வாறு கூறியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக தாம் கருதவில்லை என்று ஹாஸ்ஸான் கரிம் குறிப்பிட்டார்.
மலாய்க்காரர் மட்டுமே நாட்டின் பிரதமராக வர முடியும் என நாட்டின் அரசிலமைப்பு சட்டத்தில் எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை என்று ஹாஸ்ஸான் கரிம் விளக்கினார்.
தாம் ஒரு மலாய்க்காரர், ஒரு மலேசியர் என்று குறிப்பிட்ட ஹாஸ்ஸான் கரிம், ஒரு வழக்கறிஞராகவும், வழக்குரைஞராகவும் இருப்பதால் அரசியலமைப்பு
சட்டத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை தெளிவாக கூற முடியும் என்றார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 43 ஆவது பிரிவு, 2 ஆவது ஷரத்தின்படி மலேசியராக இருக்கக்கூடிய யார் வேண்டுமானாலும் பிரதமராக வர முடியும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், இனத்தை அல்லது சமயத்தை அடிப்படையாக கொண்டு பிரதமராக வரக்கூடியவரை நாம் கருத்தில் கொள்கிறோம் என்று ஹாஸ்ஸான் கரிம் தெளிவுபடுத்தினார்.
பிரதமராக வருவதற்கு மூன்று நிபந்தனைகளை மட்டுமே அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. பிரதமர் வேட்பாளர் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும், நாடாளுமன்றத்தில் போதுமான ஆதரவை பெற்று இருக்க வேண்டும், இதற்கு மேலாக மாமன்னரின் அங்கீகாரத்தை பெற்று இருக்க வேண்டும்.
இந்த மூன்றையும் நிறைவு செய்யக்கூடிய ஒருவர் நாட்டின் பிரதமராக வர முடியும் என்று ஹாஸ்ஸான் கரிம் விளக்கினார்.








