ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான பக்காத்தான் ஹரப்பானின் தேர்தல் கொள்கை அறிக்கை வரும் திங்கட்கிழமை அன்று கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்களால் இறுதி செய்யப்படவுள்ளதாக அதன் பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிக்கை குழு தனது பணிகளை முடித்துவிட்டதாகவும், பக்காத்தான் தலைவரின் இறுதி ஒப்புதலுக்காக அது காத்திருப்பதாகவும் கூறினார். ஒப்புதல் பெற்றவுடன் சிறப்புச் செய்தியாளர் சந்திப்பு மூலம் இது பொதுமக்களுக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றார்.
இம்முறை வெற்று வாக்குறுதிகளைத் தவிர்த்து, பொருளாதார வளம், அரசியல் நிலைத்தன்மைன , மக்கள் நலன் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய, நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகளே தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என அவர் குறிப்பிட்டார்.








