நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகரமான வெள்ளப் பாதிப்பைத் தொடர்ந்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் உதவுவதற்காக ஸ்மார்ட் என்ற சிறப்பு பேரிடர் மீட்புக் குழுவை அனுப்புகிறது மலேசியா.
அதேவேளையில், நேபாள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், பேரிடருக்குப் பிந்தைய மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியையும் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு கவுன்சிலான என்எஸ்சி (NSC) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான நாட்மா (Nadma) ஆகியவை வெளியுறவு அமைச்சு மற்றும் நேபாள அரசுடன் ஒருங்கிணைந்து ஸ்மார்ட் குழுவை அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நேபாளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மலேசியர்களைக் கண்டறிந்து பாதுகாப்பாக மீட்பதுடன், அவர்களை மலேசியாவிற்கு அழைத்து வருவதற்கும் ஸ்மார்ட் குழுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், நேபாளத்தில் உள்ள மலேசியத் தூதரகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி, அங்குள்ள மலேசியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளிலும் ஸ்மார்ட் குழு ஈடுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று ஆகஸ்ட் 29-ஆம் தேதி நிலவரப்படி, நேபாளம் மற்றும் திபேத் பகுதிகளில் ஏற்பட்ட பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 675 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சுமார் 3,000 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மலேசிய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, நேபாளத்தில் 55 பேர், சீனாவில் 36 பேர் என மொத்தம் 91 மலேசியர்கள் இன்னும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.








