ஆயர் இத்தாம் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வன்முறை மோதல் தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 13 ஆடவர்களை பினாங்கு போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று ஆகஸ்ட் 29-ஆம் தேதி அதிகாலை சுமார் 2.45 மணியளவில் SJK(C) Kong Min கிளை பள்ளி முன்பாக 17 மற்றும் 25 வயதுடைய இரு உள்ளூர் ஆடவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதலானது கோத்தா பாலி, பாயா தெருபோங் பகுதியில் உள்ள உணவக வளாகத்தில் ஏற்பட்ட கடன் தொடர்பான பிரச்சினையால் ஏற்பட்டிருக்கலாம் என பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ டென்னிஸ் லிம் தெரிவித்துள்ளார்.
மேலும், மோதலின் போது கார் ஒன்று பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரை மோதிய சம்பவம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பினாங்கு முழுவதும் 5 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 16 முதல் 33 வயதுக்குட்பட்ட 13 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








