நாளை நடைபெறவுள்ள 69-வது தேசிய தினக் கொண்டாட்டங்கள் எந்தவித தடையுமின்றி சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெறும் என மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இஸ்தானா புக்கிட் துங்குவில் இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடனான சந்திப்பிற்குப் பிறகு மாமன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவதற்கு விழாவில் பங்கேற்கும் அனைவரும் தங்களது சிறந்த பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் சுல்தான் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இச்சந்திப்பின் போது நாட்டின் தற்போதைய நிலவரம் மற்றும் தேசிய தின விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து மாமன்னருக்குப் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
‘Malaysia Madani: Kesejahteraan Dinikmati’ என்ற கருப்பொருளில் நாளை காலை 8 மணிக்கு டத்தாரான் புத்ராஜெயாவில் இவ்விழாவானது தொடங்குகிறது.
இதில் 76 அணிகளைச் சேர்ந்த 10,819 அணிவகுப்பு வீரர்கள் மற்றும் 22 இசைக் குழுக்கள் பங்கேற்கின்றன.
மேலும், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா ஆகியோருடன், பிரதமர் அன்வார் மற்றும் அமைச்சரவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.








