Mar 25, 2026
Thisaigal NewsYouTube
தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு
தற்போதைய செய்திகள்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

Share:

கிள்ளான், மார்ச்.25-

சிலாங்கூர் மாநிலத்தின் முக்கிய மாவட்ட போலீஸ் தலைமையங்களில் ஒன்றான தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் 219-ஆவது போலீஸ் தினம், இன்று Dewan Serbaguna மண்டபத்தில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி லிம் ஜிட் ஹுய் (Lim Jit Huey) தலைமையில் இன்று பிற்பகல் 2 மணியளவில் இக்கொண்டாட்டம் இனிதே தொடங்‌கியது.

இவ்விழாவில் 250-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் மற்றும் பல்வேறு பொது இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த மாவட்ட அளவிலான கொண்டாட்டங்கள் குறித்து விவரித்த தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் நிர்வாகப் பிரிவு தலைவர் டிஎஸ்பி கார்த்திக் வாசு, போலீஸ் துறைக்கு 'விழிகளாகவும் செவிகளாகவும்' இருந்து துணையாகச் செயல்படும் பொது இயக்கங்களின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டினார். அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டும் வகையில், மாவட்ட போலீஸ் தலைவர் மூலமாக பொது இயக்கப் பிரதிநிதிகளுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குற்றச் செயல்களைக் குறைப்பதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் போலீஸ் துறையினருடன் இணைந்து செயல்படும் இத்தகைய அமைப்புகளின் ஒத்துழைப்பு பாராட்டுக்குரியது என்றும் டி.எஸ்.பி. கார்த்திக் வாசு பெருமிதம் தெரிவித்தார்.

இந்த உன்னத தினத்தில் தென்கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமைகத்தில் நன்சான்றிதழ் வழங்கி, கெளரவிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளில் ASP யுகேந்திரன் நாகலிங்கமும் அடங்குவர்.

219-ஆவது போலீஸ் தினத்தை முன்னிட்டு, தெற்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகம் வழங்கிய நற்சான்றிதழ் தங்களுக்குக் கிடைத்த ஒரு பெரும் அங்கீகாரம் என மலேசிய இந்து சங்கத்தின் கோலக்கிள்ளான் பேரவைத் தலைவர் டாக்டர் அந்தோணி சூசை பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தங்களது பொதுச் சேவையைப் பாராட்டி கௌரவித்த தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி லிம் ஜிட் ஹுய் மற்றும் உயரதிகாரிகளுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், "மலேசிய இந்து சங்கத்தின் கோலக்கிள்ளான் பேரவை, போலீஸ் துறையுடன் எப்போதும் இணக்கமான உறவைக் கொண்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு மற்றும் அமைதி காக்கும் பணிகளில் காவல்துறையினருக்குத் துணையாகச் செயல்படும் எங்களது சேவையை அங்கீகரித்து இந்த நற்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது எங்களைப் போன்ற பொது இயக்கங்களுக்குக் கிடைத்த கௌரவம் மட்டுமல்லாமல், தொடர்ந்து சமூகப் பணியாற்ற கூடுதல் ஊக்கத்தையும் அளிக்கிறது," என்று டாக்டர் அந்தோணி விவரித்தார்.

இந்த நிகழ்வில் தென் கிள்ளான் வட்டாரத்தை சேர்ந்த இதர நன்சேவையார்களும் கெளரவிக்கப்பட்டனர்.

விழாவில் முன்னதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி லிம் ஜிட் ஹுய் போலீஸ் தின சிறப்பு உரையை வாசித்தார்.

Related News