கோலா பிலா, மார்ச்.25-
நள்ளிரவில் வாகனங்கள் நெரிசலாகச் செல்லும் சாலையின் குறுக்கே சிறு குழந்தை ஒன்று தனியாக ஓடி வரும் அதிர்ச்சியூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நெகிரி செம்பிலான், கோலா பிலா, Jalan Terachi- யில் இரவு 9:15 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தை, அவ்வழியே சென்ற ஒரு வாகனத்தின் 'டேஷ்கேம்' (Dashcam) கேமரா பதிவு செய்துள்ளது.
அந்தப் பதிவில், இருட்டில் சாலையின் நடுவே குழந்தை ஓடுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் உடனடியாக வாகனங்களை நிறுத்தினர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் ஓடிச் சென்று அந்தச் சிறு குழந்தையைப் பத்திரமாக மீட்டனர்.
இந்தக் காணொளியைப் பதிவிட்ட 'raihanhalim' என்பவர், "நானே இறங்கிச் சென்று குழந்தையை மீட்க நினைத்தேன். ஆனால், என் தாயார் பயத்தில் என்னைத் தடுக்கவே என்னால் உடனடியாக உதவ முடியாமல் போனது," என மன்னிப்புக் கேட்டு வருத்தம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கோலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முஹமட் முஸ்தஃபா ஹுசேன் கூறுகையில், இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இரவு நேரங்களில் எவ்வளவு கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.








