கோலாலம்பூர், மார்ச்.25-
நாட்டில் கொள்கலன்கள் அல்லது பீப்பாய்களில் 20 லிட்டருக்கு மேல் பெட்ரோல் அல்லது டீசல் வாங்க விரும்பும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இனி சிறப்பு அனுமதிப் பத்திரம் பெறுவது கட்டாயம் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைச்சின் அமலாக்கப் பிரிவு இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் கூறுகையில், "மானிய விலையிலான எரிபொருட்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
அவசர காலங்களைத் தவிர்த்து, வாகனத்தின் எரிபொருள் தொட்டியைத் தவிர மற்ற தேவைகளுக்காக 20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்குவோர், 1961 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
போக்லிஃப்ட் இயக்குநர்கள், விவசாயம், மீன்பிடித் தொழில், உணவுத் தொழில் மற்றும் சிறிய அளவிலான கட்டுமானப் பணிகளில் ஈடுபடுபவர்கள் இந்த சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர் என்பதையும் அவர் விளக்கினார்.








