ஜார்ஜ்டவுன், மார்ச்.25-
பினாங்கு புக்கிட் மெர்தாஜாமில் உள்ள லோரோங் சிக்கு 2 (Lorong Ciku 2) சாலைக்கு, அப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவரான மறைந்த டாக்டர் எம்.பி.எல். ஏகப்பனின் பெயரைச் சூட்டுமாறு செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் யோகன்ராஜ் தேவர் அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற செபராங் பிறை மாநகர் மன்றக் கூட்டத்தில் யோகன்ராஜ் தேவன் இந்த பரிந்துரையை முன்வைத்தார்.
டாக்டர் ஏகப்பன், புக்கிட் மெர்தாஜாம் நகராண்மைக் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் மற்றும் பினாங்கு மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் ஆவார். குறிப்பாக, 1962-ஆம் ஆண்டு பினாங்கில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முன்மொழிவை முன்வைத்தவர் இவரே. இதுவே இன்றைய மலேசிய அறிவியல் பல்கலைக்கழகமான USM உருவாவதற்கு அடிப்படை அடித்தளமாக அமைந்தது என்று யோகன் ராஜ் தேவன் சுட்டிக் காட்டினார்.
தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் எழுதிய “Heart of Service” புத்தகத்தின் மூலம் டாக்டர் ஏகப்பனின் மறைக்கப்பட்ட சாதனைகள் அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தன.
புக்கிட் மெர்தாஜாமில் Lorong Ciku 2 சாலையின் , Lorong Dr. M.P.L. Yegappan என்று மாற்றம் காண்பது மூலம் நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட ஒரு மாபெரும் தலைவருக்குச் செய்யும் கௌரவமாகவும், நகரின் அடையாளமாகவும் அமையும் என யோகன்ராஜ் தேவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








