நாடெங்கிலும் நிலவும் கடும் வெப்ப அலையானது வரும் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்றும், மார்ச் தொடங்கி ஏப்ரல் மாத மையப்பகுதி வரை வெப்பநிலை உச்சத்தை எட்டும் என்றும் மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலத்தின் இறுதியில் மேக மூட்டம் குறைவதும், சூரியன் நேரடியாக இப்பகுதிக்கு மேல் நிலைநிற்றுவதும் இதற்கான முக்கிய காரணங்களாகும் என மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமது ஹிஷாம் முகமது அனிப் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த வெப்பமான காலநிலை, ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்கும் வரை நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உச்சகட்ட காலத்தில், குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் வடக்கு மாநிலங்களில், வெப்பநிலை 37°C முதல் 38°C வரை உயரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தோ சைனா பிரதேசம் அதிக வெப்பமுடையதாக இருப்பதால் அதற்கு அருகிலுள்ள வடக்கு பிரதேசங்களில் அதிக வெப்பம் பதிவாகிறது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.








