ஈப்போ, பிப்ரவரி.24-
ஈப்போ, தாப்பா அருகே உள்ள வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 314-வது கிலோமீட்டரில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.06 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில் 71 வயது மூதாட்டி உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
கற்கள் ஏற்றிச் சென்ற லோரி, எம்பிவி வாகனம் மற்றும் ஒரு கார் ஆகிய மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இதில் லாரியும், எம்பிவி வாகனம் சாலையோரமிருந்த 15 மீட்டர் ஆழமான பள்ளத்தில் விழுந்தன.
எம்பிவி வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதே வாகனத்தில் பயணம் செய்த 43 வயது ஓட்டுநர் மற்றும் 77 வயது முதியவர் ஆகிய இருவரும் படு காயங்களுடன் மீட்கப்பட்டனர். காரின் ஓட்டுநரும், லாரி ஓட்டுநரும் காயமின்றி தப்பினர்.
தாப்பா தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, வாகன இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களைச் சிறப்பு உபகரணங்கள் கொண்டு மீட்டனர்.








