பகாங், பெந்தோங் பகுதியில் உள்ள அரச மலாய் ரெஜிமென்ட் 25-வது பட்டாளம் முகாமில், கடந்த திங்கட்கிழமை தனது சக வீரர்கள் ஏழு பேரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் 37 வயதுடைய ராணுவ கோப்ரல் ஒருவரின் தடுப்புக்காவல் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெந்தோங் மாவட்ட போலீஸ் துறைத் தலைவர் சூப்பரிண்டெண்டன் சைஹாம் முகமட் கஹார் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், " குற்றவியல் சட்டம், 325 ஆவது பிரிவின் கீழ் விசாரணைகளை மேற்கொள்வதற்காக இந்தத் தடுப்புக்காவல் நீட்டிப்பு கோரப்பட்டது. அதன்படி, சந்தேக நபரான அந்த ராணுவ வீரரின் தடுப்புக்காவல் ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
போலீஸ் துறையினர் தற்போது இது தொடர்பான விசாரணை அறிக்கையைப் பூர்த்தி செய்து வருவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அது மாநில அரசு வழக்கறிஞர் இயக்குநரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கான உண்மையான காரணம் மற்றும் பின்னணி குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெளிவுபடுத்தினார்.








