ஈப்போ, நவ.13-
வெளியிலிருந்து குப்பைகளை சேகரித்து வந்து, தனது வீட்டிற்குள் ஆள் உயரம் வரையில் குவித்து வைத்திருந்த முதியவர் ஒருவரின் செயல், அக்கம் பக்கத்தவர்களை முகம் சுளிக்க வைத்ததைத் தொடர்ந்து அந்த முதியவரின் வீட்டிலிருந்து ஒரு டன்னுக்கும் கூடுதலான எடைக் கொண்ட குப்பைகள் இன்று அகற்றப்பட்டன.
ஈப்போ, தாமான் பெர்பாடுவான் ஜெயாவில் உள்ள தனது வீட்டில் குப்பைகளின் துர்நாற்றத்திற்கு மத்தியில் வாழ்த்து வந்த 66 யதுடைய அந்த முதியவரின் வீட்டிற்குள் நுழைந்த ஈப்போ மாநகர் மன்ற துப்புரவு பணியாளர்கள், வீட்டிற்குள் மலைப்போல் குவிக்கப்பட்டு இருந்த குப்பைகளை கண்டு மலைத்தனர்.
மறுசுழற்சிக்குரிய அந்த குப்பைக்கூளங்களை மறுசுழற்சி மையத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்யாமல் பல மாதங்களாக குப்பைகள் மத்தியில் அந்த முதியவர் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
அண்டை வீட்டுக்காரர்கள் செய்து கொண்ட புகாரைத் தொடர்ந்து ஒரு மாடி கொண்ட அந்த தரை வீட்டிலிருந்து மாநகர் பணியாளர்கள் முழுமையாக அகற்றி அந்த வீட்டை சுத்தம் செய்தனர்.








