சிலாங்கூர் மாநிலத்தில் தீவிர வறுமை நிலை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்டு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் மூலம் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷா ஆலமில் நேற்று நடைபெற்ற பெட்டாலிங் மாவட்ட மேம்பாட்டு கூட்டத்தில் இந்த தகவல் தனக்கு வழங்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும், மாநிலத்தில் எந்த ஒரு குடும்பமும் உதவியின்றி தவிக்கும் நிலை மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய தொடர்ந்து கண்காணிப்புகள் அவசியம் என்றும் அன்வார் வலியுறுத்தியுள்ளார்.
அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் முன்னேறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அன்வார், பயிற்சிகள் மூலம் அவர்கள் தங்களே வருமானம் ஈட்டும் திறனை பெறச் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, சிலாங்கூரின் பொருளாதார வலிமை முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அன்வார் குறிப்பிட்டுள்ளார்.








