மலாக்கா , ஆகஸ்ட் 27-
மலாக்கா, ஜசின், ரிம் என்ற இடத்தில் உள்ள ஒரு சிகை அலங்கரிப்பு நிலையத்தில் முன்புறம், பாராங் ஏந்திய முகமூடி அணிந்த கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் ஓர் இந்திய ஆடவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது மற்றும் உயிரிழந்த நபரின் தம்பியை ஜாசின் மருத்துவமனை வரை துரத்திச் சென்று தாக்குதல் நடத்தியது தொடர்பில் போலீசார், மூன்று நபர்களை கைது செய்துள்ளனர்.
பிடிபட்டுள்ள 21, 22 மற்றும் 31 வயதுடைய அந்த மூன்று நபர்களை விசாரணைக்கு ஏதுவாக வரும் செப்டம்பர் முதல் தேதி வரை 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக ஜசின் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஹ்மத் ஜமீல் ரட்ஸி தெரிவித்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் சில நபர்களுக்கு போலீசார் வலை வீசியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் முகமூடி அணிந்த கும்பலின் கடும் தாக்குதலுக்கு ஆளான மலாக்கா, ஜாசின், ரிம், தமன் மெஸ்ரா ரிம்- மைச் சேர்ந்த 24 வயது விநோத் மூர்த்தி என்பவர் ,ஜசின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
கழுத்து மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் ஆளமான வெட்டுக்காயங்களுக்கு ஆளான அந்நபர், அதிக ரத்தம் வெளியேற்றம் காரணமாக உயிரிழந்தாக கூறப்படுகிறது.
அதேவேளையில் சிகை அலங்கரிப்பு நிலையம் முன்புறம் நடந்த இந்த தாக்குதலில் கடும் காயங்களுக்கு ஆளான தனது அண்ணன் விநோத்தை காரில் ஏற்றிக்கொண்டு அவரின் தம்பி ஜாசின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். .
மருத்துவமனையின் அவசரப்பிரிவில் கார் நிறுத்தப்பட்ட போது, சம்பந்தப்பட்ட முகமூடி கும்பல், அந்த நபரின் காரை பின் தொடர்ந்து வந்து, அவரின் கார் கண்ணாடியை அடித்து துவம்சம் செய்ததுடன் மருத்துவமனை வளாகத்தில் பெரும் ரகளை புரிந்துள்ளது.
இதானல் அந்த மருத்துவமனையின் அவசரப்பிரிவு வளாகத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது. மக்கள் நாலா புறமும் சிதறி ஓடிய காட்சியை சித்திரிக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது..
இந்த சம்பவத்தில் விநோத்தின் தம்பி, ஜாசின் மருத்துவனையிலிருந்து கார் மூலம் தப்பிச் சென்று, ஜாசின் போலீஸ் நிலையத்தில் அடைக்கலம் புகுந்துள்ளார்.
உயிரிழந்த விநோத், மிக அமைதியான நபர் என்றும், லோரிகள் மற்றும் மணிவாரி இயந்திர சேவையை நடத்தும் சொந்த தொழிலில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தகவல் கொண்டு இருப்பவர்கள், புலன் விசாரணை அதிகாரியுடன் 016-5209501 அல்லது 06-529 2222 இணைப்பு 206 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை Jasin மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் அஹ்மத் ஜமீல் ரட்ஸி கேட்டுக்கொண்டார்.








