ஷா ஆலாம், பிப்ரவரி.25-
ரவாங்கில் உள்ள ஒரு கோவிலின் கட்டடம் ஒன்று அகற்றப்படுவதற்கு முன்னதாக, அங்கிருந்த சிலைகள் எவ்வித அசம்பாவிதமின்றி பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிலாங்கூர் போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ ஷாஸெலி கஹார் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிலைகளை இடம் மாற்றும் பணி சுமூகமாக நிறைவடைந்ததை உறுதிப்படுத்தினார்.
கோவில் நிர்வாகப் பிரதிநிதிகள் மற்றும் பக்தர்கள் உட்பட மொத்தம் 10 பேர் இணைந்து அங்கிருந்த நான்கு சிலைகளையும் இடமாற்றம் செய்தனர்.
சிலைகள் இடம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர் இன்று காலை முதல் நிலத்தைச் சுத்தப்படுத்தும் பணிகளைத் தொடங்கினார்.
இந்த நிகழ்வின் போது போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்; எவ்வித தேவையற்ற சம்பவங்களும் நிகழவில்லை என்பதை டத்தோ ஷாஸெலி கஹார் உறுதிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்று டத்தோ ஷாஸெலி அறிவுறுத்தியுள்ளார். இன மற்றும் சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் எவரும் சட்டத்தைத் தன் கையில் எடுக்கக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.








