கோலாலம்பூர், நவ.6-
மலேசியாவில் ஆயிரக்கணக்கான வங்காளதேசிகள் நுழைவதற்கு பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக கூறப்படும், தற்போது மலேசியப் பிரஜையாக மாறியுள்ள ஒரு வங்காளதேசியான பெஸ்தினெட் தோற்றுநர் அமினுல் இஸ்லாம் அப்துல் நோர் தனக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அந்தக் குற்றச்சாட்டில் அடிப்படையில்லை என்று தனது வழக்கறிஞர் என். சிவநந்தன் மூலம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மோசடிகள் தொடர்பில் தன்னையும் தனது வர்த்தக சகாவான ருஹுல் அமினையும் கைது செய்து, தங்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பும்படி வங்காளதேச போலீசார், மலேசியாவை கேட்டுக்கொண்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி தொடர்பில் அந்த பெஸ்தினெட் தோற்றுநரின் வழக்கறிஞர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.
இந்த இருவர் மீதும் பணமோசடி, மற்றவர்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை வர்த்தக நோக்கத்திற்கு ஏமாற்றி, கடத்தி வந்தது முதலிய குற்றச்சாட்டுகள் இருப்பதாக வங்காளதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.








