உலகளாவிய எரிபொருள் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு,புடி மதானி திட்டத்தின் கீழ் டீசல் பயனாளர்களுக்கான மாதாந்திர உதவித்தொகையை ஏப்ரல் மாதத்திற்கு மட்டும் 400 ரிங்கிட்டாக உயர்த்த மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 300 ரிங்கிட்டுடன் கூடுதலாக 100 ரிங்கிட் சேர்க்கப்பட்டு, வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தீபகற்ப மலேசியாவிலுள்ள சுமார் 1.5 லட்சம் தனிநபர் டீசல் வாகன உரிமையாளர்களும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும் பயனடைவர்.
மேலும், விவசாய இயந்திரங்களுக்காக 20 லிட்டருக்கும் அதிகமான டீசலை வாங்குவதற்கான விதிகளையும் அரசாங்கம் தளர்த்தியுள்ளது. அதேவேளையில், நெல் சாகுபடி ஊக்கத்தொகை ஹெக்டேருக்கு 300 ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், தீபகற்ப மலேசியாவில் ஒரு லிட்டர் டீசல் விலை 6 ரிங்கிட் 72 சென்னாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.








