ஈப்போவில், நேற்று பகலில் ரமலான் நோன்பைத் தவிர்த்துவிட்டு, தாமான் ஜூப்ளி, ஜாலான் ராஜா எக்ராம் என்ற இடத்திலுள்ள ஸ்னூக்கர் மையத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக அரசு ஊழியர் ஒருவர் உட்பட 8 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு வாரமாக உளவுத்துறை நடத்திய கண்காணிப்பின் அடிப்படையில், "ஓப் பொந்தேங்" என்ற நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டதாக பேராக் மாநில இஸ்லாமிய சமயத் துறையின் அமலாக்கத் தலைவர் அஷ்ரப் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அந்த மையமானது, நோன்பில் இல்லாத முஸ்லிம்கள் ஒன்று கூடும் இடமாக அமைந்திருந்ததாகவும், அங்கு உணவுகள், மது மற்றும் புகை ஆகியவை வழங்கப்பட்டதாகவும் அஷ்ரப் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
36 முதல் 59 வயதுக்குட்பட்ட அந்த எட்டு பேரில், ஐந்து பேர், ரமலானை அவமதித்ததற்காக, 1992 ஆம் ஆண்டு பேராக் ஷாரியா குற்றவியல் சட்டம் பிரிவு 24 இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.








