நோன்புப் பெருநாளை முன்னிட்டு அமல்படுத்தப்படவிருக்கும் ஒப் செலாமாட் சோதனை நடவடிக்கை நெடுகிலும் நாடு முழுவதும் விபத்துகள் ஏற்படும் அபாயமுள்ள 25 பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.
அதே வேளை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள 34 இடங்களும் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
26-வது முறையாக நடைமுறைப்படுத்தப்படும் ஒப் செலாமாட் சோதனை நடவடிக்கை நாளை தொடங்கி மார்ச் 24-ஆம் தேதி வரை நீடிக்கும் என அத்துறையின் இயக்குனர் டத்தோ ஸ்ரீ முகமது ஹஸ்புல்லா அலி தெரிவித்தார்.
சீரான போக்குவரத்தை உறுதிச் செய்வதோடு சாலை விபத்துகள், குறிப்பாக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் விபத்துகளைக் குறைப்பதில் இந்த நடவடிக்கை கவனம் செலுத்தும்.
சோதனைக் காலகட்டத்தில் 23 லட்சம் வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமையைக் கண்காணிக்க 5,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவ்வேளையில், வேகக் கட்டுப்பாட்டை மீறுவது, வாகனம் ஓட்டும் போது கைபேசிகளை உபயோகிப்பது, அவசரப் பாதையைப் பயன்படுத்துவது, சமிக்ஞை விளக்குகளைப் பின்பற்றாதது, இரட்டைக் கோடுள்ள பாதைகளில் முந்திச் செல்வது, வரிசையில் இடையில் குறுக்கிடுவது போன்ற ஆறு முக்கிய குற்றங்களுக்கு எதிராகக் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என முகமது ஹஸ்புல்லா குறிப்பிட்டார்.








