கோலாலம்பூர், ஜூலை.19-
1MDB நிதி முறைகேடு வழக்குடன் தொடர்புடைய 1.37 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான சொத்துகளையும், நிதியையும், அமெரிக்கா, மலேசியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளதாக, சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் தெரிவித்துள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் வழங்கிய தகவலின் அடிப்படையில், அஸாலினா இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் நேற்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், இதுவரை திருப்பி வழங்கப்பட்ட சொத்துகளுக்கு அப்பாற்பட்ட வகையில், 1MDB-யுடன் தொடர்புடைய கணிசமான அளவிலான நிதி மற்றும் சொத்துகள் இன்னும் அமெரிக்காவிலும், பிற வெளிநாடுகளிலும் முடக்கப்பட்ட நிலையில் இருப்பதாகவும், சில சொத்துகள் பறிமுதல் நடவடிக்கைகளின் கீழ் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில், முடக்கப்பட்ட அந்த சொத்துகளின் துல்லியமான மதிப்பை தற்போது கணக்கிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காரணம், அந்த வழக்குகள் இன்னும் நீதிமன்ற விசாரணையில் இருப்பதுடன், சொத்துகளின் சந்தை மதிப்பும் காலத்திற்கு ஏற்ப மாறுபடுவதால், அவற்றின் இறுதி மதிப்பை தற்போது உறுதியாகக் கூற இயலாது என்றும் டத்தோ ஶ்ரீ அஸாலினா ஒத்மான் சையிட் விளக்கமளித்துள்ளார்.








