ஜோகூர் பாரு, ஜூலை.19-
பேங்க் நெகாரா வங்கி அதிகாரிகள் போலவும், அரசாங்க வழக்கறிஞர்கள் போலவும் நாடகமாடிய மோசடி கும்பலை நம்பிய, ஜோகூரைச் சேர்ந்த 63 வயது தொழிலதிபர் ஒருவர், தமது 1மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான சேமிப்பு நிதியை இழந்துள்ளார்.
அக்கும்பலானது பண மோசடி வழக்கில் அவருக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, புதிய வங்கிக் கணக்கு தொடங்கவும், அவரது பணத்தை அதில் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
மோசடிக் கும்பலின் மிரட்டலை நம்பிய அவர், கடந்த மார்ச் முதல் மே வரை 51 பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று போலீசாரிடம் இது தொடர்பாக புகார் அளித்த அவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்ருல் ஹிஷாம் முஹமட் ஷாஃபி தெரிவித்துள்ளார்.
இது போன்ற தொலைப்பேசி மோசடிக் கும்பலை நம்பி, வங்கி சம்பந்தமான எந்த ஒரு பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என்றும், அவ்வாறு சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியை நேரடியாகத் தொடர்பு கொண்டு, விசாரிக்குமாறும் பொதுமக்களை அஸ்ருல் வலியுறுத்தியுள்ளார்.








