அலோர் ஸ்டார், மே.18-
கெடா மாநிலம், அலோர் ஸ்டார், ஜாலான் தித்தி காஜா பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு, அங்குள்ள ஓர் உணவகத்திற்கு வெளியே பெண் ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து கோத்தா ஸ்டார் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி சையிட் பஸ்ரி சையிட் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில், சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.50 மணி தாமான் ஊடா அலோங் பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்நபர் தற்போது விசாரணைக்கு உதவுவதற்காக வரும் மே 24-ஆம் தேதி வரை, ஏழு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, 35 வயதான அப்பெண், தனது மஸ்டா காரில், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த போது, அவர் அருகில் பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த அந்நபர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார்.
இந்நிலையில், அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு தற்போது அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.








