கோலாலம்பூர், மே.18-
மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இன்று இஸ்தானா நெகாராவில் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இச்சந்திப்பில் அரசாங்கத் தலைமை செயலாளர் ஷம்சூல் அஸ்ரி அபு பாக்காரும் கலந்து கொண்டார்.
ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் தொடர்பாக இச்சந்திப்பு நடைபெற்றதாக மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள பிரிவுகள் தொடர்ந்து அதிகரித்தால், திடீர் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என அன்வார் நேற்று ஜோகூரில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டில் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, இன்று இச்சந்திப்பு நடப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
முன்னதாக, கூட்டணிக்குள் உள்ள ஒப்பந்தங்கள் மதிக்கப்படாவிட்டால் ஜோகூர் மட்டும் அல்லாமல் நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பகாங் மற்றும் பினாங்கு உள்ளிட்ட மாநிலங்களிலும் தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என அன்வார் அறிவித்திருந்தார்.
இது குறித்து பக்காத்தான் ஹராப்பான் தலைமையுடன் விவாதிக்க இருப்பதாகவும், நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கு இந்த நடவடிக்கை மிகவும் அவசியம் என்றும் அன்வார் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.








