ஷா ஆலாம், மே.18-
ஷா ஆலாம், செக்ஷன் 32, புக்கிட் கெமுனிங் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில், கடந்த வாரம் 14 வயது சிறுவனைக் கட்டாயப்படுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய அந்தச் சந்தேக நபர், கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் உள்ள வாடகை அறை ஒன்றில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.
அந்நபர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டவர் என்றும், தற்போது கடன் வசூலிப்பவராகப் பணியாற்றி வருகிறார் என்றும் மாநில போலீஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மருத்துவப் பரிசோதனையில் அந்நபர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது விசாரணைக்கு உதவுவதற்காக அவர் நாளை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.








