மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கியைக் கைது செய்ய வலியுறுத்தி இன்று சனிக்கிழமை பிற்பகலில் திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தையொட்டி கோலாலம்பூர் சோகோ வணிக வளாகத்தின் முன்பாகப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாலை 3 மணிக்குத் தொடங்கவிருந்த இந்தப் போராட்டத்திற்கு முன்னதாகவே, டஜன் கணக்கான போலீஸ் அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டனர். வணிக வளாகத்தின் நுழைவாயில் மற்றும் சாலையின் மறுபுறம் எனப் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் நிலைநிறுத்தப்பட்டனர். இதில் கோலாலம்பூர் போலீஸ் அதிரடிப்படையினரும் இணைந்துள்ளனர்.
இருப்பினும், பிற்பகல் 2.20 மணி அளவில் அப்பகுதியில் பலத்த மழை பெய்யத் தொடங்கியதால், போராட்டக்காரர்கள் எவரும் அங்கு கூடியதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மழையினால் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகளும், செய்திகளைச் சேகரிக்க வந்திருந்த ஊடகவியலாளர்களும் நனைந்த நிலையில் காணப்பட்டனர்.








