கட்சியிலிருந்து நீக்கப்பட்ட, இடைநீக்கம் செய்யப்பட்ட அல்லது வெளியேறிய தலைவர்கள் மீண்டும் அம்னோவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்தலில் அவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிப்பது அவர்களின் வெற்றி வாய்ப்பைப் பொறுத்தே அமையும் என அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஸிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அல்லது மாநிலத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு 'வெற்றி பெறக்கூடிய தகுதியே' முதன்மையான அளவுகோலாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். கைரி ஜமாலுடின், ஹிஷாமுடின் ஹுசைன் போன்ற தலைவர்கள் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அடிமட்டத் தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றி தங்களின் பங்களிப்பை நிரூபிக்க வேண்டும் என்றும் துணைப்பிரதமருமான ஜாஹிட் வலியுறுத்தினார்.








