ஜார்ஜ்டவுன், பிப்ரவரி.22-
மறைந்த இராணுவப் பயிற்சி வீரர் கே. இந்திரனின் இளைய சகோதரிக்குத் தேவையான அனைத்துக் கல்வி உதவிகளையும் ஒருங்கிணைத்து வழங்குமாறு பினாங்கின் தீமோர் லாவுட் மாவட்டக் கல்வி அலுவலகத்தை கல்வி அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. குவாந்தான் இராணுவ முகாமில் பயிற்சியில் இருந்த போது காலமான இந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக், தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
ஆறாம் வகுப்பு பயிலும் இந்திரனின் தங்கை Maitraashiniயின் கல்வித் தேவைகளை அரசாங்கம் அவ்வப்போது கண்காணித்து ஆதரவு வழங்கும் என்று அவர் உறுதியளித்தார். சிறந்த ஒழுக்கமும் கல்வியில் ஆர்வமும் கொண்ட இக்குடும்பத்திற்கு இந்த இழப்பு பேரிடியாக இருந்தாலும், குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கல்வி அமைச்சு இந்த ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. நாட்டுக்காகச் சேவையாற்றிய ஒரு வீரரின் குடும்பத்திற்குத் தோள் கொடுக்கும் வகையில் இந்த மாந்தநேய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.








