பினாங்கு மாநிலம் நிபோங் திபால் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் ஆடவர் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 மியான்மர் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டு, 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
30 வயதுகளில் உள்ள அவர்கள் நெகிரி செம்பிலான், லெங்கெங் பகுதியில் கைது செய்யப்பட்டு புக்கிட் மெர்தாஜாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கடத்தல் தொடர்பான குற்றவியல் சட்டத்தின் 365-ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடைபெற்று வருகின்றது.
தாமான் ஶ்ரீ பிஸ்தாரி பகுதியில் உள்ள வீட்டின் கழிவுநீர் தொட்டியில், 50 வயதுகளில் உள்ள அந்த நபரின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது. குறைந்தது இரண்டு நாட்களாக அச்சடலம் தொட்டிக்குள் இருந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, உயிரிழந்தவரின் வங்கிக் கணக்கில் சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றதாக அவரது மருமகன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை மட்டும் சுமார் 30 ஆயிரம் ரிங்கிட் பணம் சுங்கை பாக்காபில் உள்ள மளிகைக் கடையின் கணக்குக்கு மாற்றப்பட்டதாகவும், அந்தப் பணத்தை மியன்மாரில் உள்ள வங்கிக்கு மாற்றுமாறு கடை உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.








